தமிழ்நாடு

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய மாணவன்: மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

kaleelrahman

ஓசூரில் மின்னல் தாக்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் என்பவருடைய மகன் .சிவனேஷ் (17). இவர், ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை அதேபகுதியில் டியூஷன்க்குச் சென்ற மாணவன் வீட்டிற்கு திரும்பும் வழியில் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஜீவா நகரில் பகுதியில் உள்ள அரசமரத்தின் கீழ் ஒதுங்கி நின்று கொண்டிருந்த அவர் மீது எதிர்பாராத வகையில் மின்னல் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஓசூர் மாநகர மேயர் சத்யா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மின்னல் தாக்கி மாணவன் உயரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.