தமிழ்நாடு

மாங்காடு: குளிப்பதுபோல் போட்டோ எடுத்ததில் நடந்த விபரீதம் - நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

Sinekadhara

மாங்காடு அருகே கல்குவாரியில் குளிப்பது போல் போட்டோ எடுத்த போது நீரில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் நடந்துள்ளது. 

சென்னை சூளைமேடு பகுதியின் புது மேற்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் நித்திஷ்(17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று இவரது சகோதரர் ராகுல் மற்றும் நண்பர்கள் சூர்யா, எழில்மாறன் உள்ளிட்ட 7 பேர் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர். அங்கு குளிப்பது போல் போட்டோ எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நித்திஷ் நீருக்குள் மூழ்கிவிட்டார். இதையடுத்து உடன் இருந்தவர்கள் நித்திஷை மீட்க முடியாமல் தவித்தனர். இதுகுறித்து மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் மூழ்கிய நித்திஷை இறந்த நிலையில் பிணமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். கல்குவாரியில் குளிப்பது போல் போட்டோ எடுத்தபோது தவறி விழுந்து மாணவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.