தமிழ்நாடு

ஈஷா மைய குளத்தில் மாணவர் உயிரிழப்பு

webteam

கோவை ஈஷா மைய தீர்த்தக் குளத்தில் குளித்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சக மாணவர்கள் மற்றும் பேராசிரியருடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருக்கும் ஈஷா மையத்தின் சூரிய குண்டம் என்ற தீர்த்த குளத்தில் அந்த மாணவர் குளித்தபோது மூச்சு திணறி உயிரிழந்தார். 4 அடி ஆழம் கொண்ட அந்த தீர்த்தக்குளம் மிகவும் குளிர்ந்த நிலையில் காணப்படும் என்பதால் ஆஸ்துமா, அலர்ஜி, வலிப்பு உள்ளிட்ட சில நோய்கள் உள்ளவர்கள் அதில் குளிக்க வேண்டாம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதாக ஈஷா மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், அந்த மாணவருக்கு அதுபோன்ற பிரச்னை ஏதும் இருந்திருக்கலா‌ம் என்றும் ஈஷா மையம் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே முழுத் தகவல்களும் தெரியவரும் என்று கூறப்படுகிறது. ஆலந்துறை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.