தமிழ்நாடு

நூல் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 19-வது நாளாக போராட்டம்- இழப்பு எவ்வளவு தெரியுமா?

kaleelrahman

ராஜபாளையத்தில் நூல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் 19-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்கள் சுமார் ரூ.5 லட்சம் வரை தினமும் ஊதியமாக பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை சுமார் 230 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டி, நூல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 5 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இன்று 19 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இப்போராட்டம் காரணமாக வேலை இன்றி உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.95 லட்சம் ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி இழப்பு ரூ.3.4 கோடியை எட்டி உள்ள நிலையில், அரசுக்கு ரூ. 15.20 லட்சம் ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நூல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பருத்தி சேலை உற்பத்தியாளர்களும், விசைத்தறி தொழிலாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.