தமிழ்நாடு

தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பனை செய்தால் நடவடிக்கை: கேபிள் டிவி நிறுவனம் எச்சரிக்கை

JustinDurai
தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பனை செய்யும் கேபிள் ஆப்ரேட்டர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார், ஈரோட்டில் உள்ள கேபிள் டிவி கட்டுபாட்டு அறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குறிஞ்சி சிவக்குமார், ''ஈரோடு மாவட்டத்தில் சுமார் 93 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில் சுமார் 23 செட்டாப் பாக்ஸ்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்று பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு ஆபரேட்டர்களும் அதிகாரிகளுமே பொறுப்பு. அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் செட்டாப் பாக்ஸ்களுக்கான விலை வசூலிக்கப்படும்.
மேலும் சில ஆப்பரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல் தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பதாக புகார் வந்துள்ளதாகவும் அது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் கூறினார்.