ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்  Facebook
தமிழ்நாடு

‘20,000 பேரின் வாழ்வாதாரத்திற்காக ஆலையை திறக்க வேண்டும்’ - ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு

PT WEB

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், “தமிழக அரசு அனுமதியளிக்கக் கூடாது” என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

சங்கரப்பேரி பகுதியில் உள்ள தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சார்ந்த வக்கீல் முருகன், நான்சி, துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பு வழக்கறிஞர் ஜெயம் பெருமாள் ஆகியோர் கூட்டாக செய்தியாளருக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகியும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான வழக்கறிஞர் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த கடந்த ஒரு மாத காலமாக சமூக ஊடகங்கள் மூலமாக அழைப்பு விடுத்தும் வெறும் 120 பேர் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளார்கள் என்பது தெரிகிறது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தப் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. மாறாக வெளியூரைச் சார்ந்த நபர்கள் இந்த போராட்டத்திற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட்டை சுற்றி உள்ள கிராம மக்கள் வாழ்வாதாரத்தை மீட்டு எடுப்பதற்காக தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இதுவரை 70,000 மனுக்கள் அளித்துள்ள போதிலும் போராட்டத்திற்காக மாணவர்களையோ சிறு குழந்தைகளையோ அழைத்து வந்தது கிடையாது.

ஸ்டெர்லைட் ஆலை

ஆனால் இன்று ஸ்டெர்லைட்க்கு நடைபெற்ற எதிரான போராட்டத்தில் சிறுவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. வருங்கால சந்ததிகளாக விளங்கக்கூடிய சிறுவர்களை இந்த போராட்டத்திற்கு அழைத்து வந்தது பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடைய வருமானம், நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை அரசு பின்பற்ற வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சார்ந்த நான்சி செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அவர் பேசுகையில், “உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மூன்று விதமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அனுமதி அளித்தால் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். இந்த வேலை கிடைப்பதை தடுக்கும் வகையில்தான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிலர் தேவையற்ற வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குழந்தைகளை அழைத்து வந்து போராட்டம் நடத்தியுள்ளனர். தவறாக வழி நடத்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 20,000 பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், வெறும் 120 பேர்தான் எதிராக போராட்டம் நடத்துகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாங்கள் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அமைதியான முறையில் மனு அளித்து வருகிறோம். அவர்கள் அந்நிய சக்தியின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் தவறான போராட்டத்தின் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்று ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை இது போன்று தவறாக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும். இன்று போராட்டத்தை தூண்டிய வழக்கறிஞர் ஹரி ராகவன், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்.

போராட்டம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 20,000 பேர் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது போராட்டம் வெற்றி பெறும்” என்றார்.