தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒருநபர் ஆணையம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒருநபர் ஆணையம் விசாரணை

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணையை வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருநபர் விசாரணை ஆணையமான அருணா ஜெகதீசன் வரும் திங்களன்று ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து தனது விசாரணையை தொடங்கும் அருணா ஜெகதீசன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம் உள்ளிட்ட பகுதிகளிலும் விசாரணை செய்யவுள்ளார். 

இதற்காக விருந்தினர் மாளிகையில் அவருக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு தனது விசாரணை அறிக்கையை 3 மாதத்திற்குள் தமிழக அரசிடம் அவர் தாக்கல் செய்யவுள்ளார். இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடல்களை பாதுகாத்து வைக்க அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.