சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்காக கும்பகோணத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கு விசாரணையின்போது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பாக 19 வழக்குகள் மட்டுமே பொன்.மாணிக்கவேலிடம் மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த நீதிபதி மகாதேவன், 531 சிலை கடத்தல் வழக்குகளையும் பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்காதது ஏன் என்றும், கும்பகோணத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுவிட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு உரிய பதில் தெரிவிக்கப்படாததால், செப்டம்பர் 11 ஆம் தேதி தலைமைச் செயலாளரும், காவல்துறை இயக்குநரும் நேரில் ஆஜராகி விளக்களிக்க உத்தரவிட்டார். மேலும் சிலை கடத்தலில் எந்த அதிகாரி ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் அவர் உத்தரவிட்டார்.