தமிழ்நாடு

‘சிலை உடைப்புக்கு தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது’- நீதிமன்றம்

‘சிலை உடைப்புக்கு தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது’- நீதிமன்றம்

Rasus

தலைவர்களின் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்றும் படி அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அங்கு இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பார்வேந்தன் என்பவர் முறையீடு செய்தார்.

அதாவது, சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிச் சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தலைவர்களின் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிச் சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனர். அத்துடன் இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்.