தமிழ்நாடு

இலங்கை கடற்படை தாக்குதலை நிறுத்த நடவடிக்கை வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

PT WEB

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 1-ம் தேதி கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை சுட்டிக்காட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது, உடனடியாக தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையையும் நிகழ்த்தக் கூடாது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும், இந்த பிரச்னைக்கு நீடித்த அரசியல் தீர்வை காண வேண்டும் என மத்திய அரசிடம் முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.