தமிழ்நாடு

துண்டுச் சீட்டுடன் பேசுவது ஏன் ? ஸ்டாலின் விளக்கம் 

webteam

பால் உற்பத்தியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் வார்ப்பார்கள் என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அந்த பாலினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கக் கூடிய நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. பால் உற்பத்தியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே முயற்சி நடக்கிறது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்தை பொறுத்தமட்டில் அதிக லாபத்தில் இயங்கி கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். 

ஆனால் முதலமைச்சர் பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. அதனால்தான் பால்விலையை உயர்த்தினோம் எனத் தெரிவிக்கிறார். அவர்களுக்குள்ளேயே முரண்பாடு உள்ளது. எது உண்மை எது பொய் என்பதை மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை மறைக்கவே மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக நான் கருதுகிறேன். எதையும் ஆதாரத்துடனும் புள்ளி விவரங்களுடனும் சொல்ல வேண்டும். தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்று பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு செல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.