தமிழ்நாடு

இலவச திட்டங்கள் அர்த்தமுள்ள முதலீடுகள்....மு‌.க. ஸ்டாலின்

webteam

இலவச திட்டங்கள் வீண் செலவு அல்ல அர்த்தமுள்ள முதலீடுகள் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு‌.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே ஊடக மாநாட்டில் பங்கேற்ற மு‌.க. ஸ்டாலின் வளர்ச்சியா? இலவசமா? எது தேவை என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இலவச திட்டங்கள் வீண் செலவு அல்ல அர்த்தமுள்ள முதலீடுகள் தான் என குறிப்பிட்டார். மேலும் சமூக நலத்திட்டங்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக மதிய உணவுக்காக செலவிடுவது வருங்கால தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு வித்திடும் அர்த்தமுள்ள முதலீடு என்று தெரிவித்தார். பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் விரிவுபடுத்தப்பட்டது என்றும் பின்னர் திமுக தலைவர் கருணாநிதியால் உண்மையிலேயே இத்திட்டம் ஊட்டசத்து மிக்க திட்டமாக மாறியது என்று கூறினார். ஆரோக்கியமான உடல்நலத்தோடு ஒரு தலைவரை உருவாக்குவது அர்த்தமுள்ள முதலீடுகள் தானே அதுபோல் முதியோர் உதவித் திட்டம், விதவைகள் மறுவாழ்வு திட்டம் எல்லாமே வறுமையின் பிடியில் சிக்கிவிடாமல் முதியோர், ஏழை எளியோர்களை காப்பாற்றும் அர்த்தமுள்ள முதலீடுகள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வறுமையின் பிடியில் இருந்து மக்களை காக்க திமுக ஆட்சியில் பல்வேறு சமூகநலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஸ்டாலின் கூறினார். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை போக்க இலவச திட்டங்கள் அவசியம் என்றும் இலவசம் பற்றி தவறான எண்ணங்கள் பரப்பப்படுவதாகவும், ஸ்டாலின் தெரிவித்தார்.