ஸ்டாலின் x
தமிழ்நாடு

"சினிமா சுனாமி மட்டுமே” - தவெக குறித்து ஸ்டாலின் விமர்சனம்!

தற்போது நடந்திருப்பது அரசியல் சுனாமி அல்ல; சினிமா சுனாமி. குழந்தைகளுக்கு பொம்மை வேண்டுமென்பதைப் போல நடிகரை பார்த்து சென்ற மக்கள் தாயிடம் வருவது போல், நம்மிடம் வருவார்கள் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Premkumar S

சட்டப்பேரவைத் தேர்தலில் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று முதன்முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்திடம் தோல்வியை சந்தித்திருக்கிறது திமுக. அக்கட்சிக்கு மேலும், அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் அமைந்தது, கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் தோல்வி. அதேசமயம், தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றிப் பெற்றிருந்தாலும், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. முதலில், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் கூறி வந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தற்போது தவெக அமைச்சரவையில் பங்கேற்று இருக்கின்றன. இது திமுகவுக்கு மேலும், பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வன்னி அரசு - ஷாஜகான்

இந்தசூழலில் தான், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தவெகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் பேசுகையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திய இளைஞரணிக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்துள்ளோம். நம்முடைய தயவில்தான் இன்று ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். நான் தோல்வியடைந்து கழகம் வெற்றி பெற்றால் கூட நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். திமுக இரண்டாவது முறையாக ஆட்சியில் ஏற முடியாது என்பதை மாற்றிக் காட்ட வேண்டுமென நான் கடுமையாக உழைத்தேன்; நீங்களும் உழைத்தீர்கள். ஆனால், அது நடக்கவில்லையே என்ற கவலை எனக்கு இருக்கிறது.

குழந்தைகள் புதிதாக ஒரு பொம்மையை பார்த்தால் அது வேண்டுமென்று அடம் பிடிக்கும்; அதன் பிறகு இரண்டு நாட்களில் அதன் மீது போர் அடித்து விடும் தூக்கி போட்டு விடுவார்கள். இன்று ஒரு நடிகரை பார்த்து அவ்வாறு தான் சென்றிருக்கிறார்கள் மீண்டும் குழந்தை தாயிடம் வருவது போல தமிழ்நாட்டு மக்கள் நம்மிடம் வருவார்கள். எனினும், தற்போது நடைபெற்றது அரசியல் சுனாமி அல்ல சினிமா சுனாமி. பெரும்பான்மையை பெற்று அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. பெரும்பாலான மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நம்முடைய தோழமை கட்சிகளின் ஆதரவுகளோடு தான், அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், இன்று நமது கூட்டணி கட்சிகள் மதில் மேல் உள்ள பூனை போல தான் இருக்கிறார்கள். ஆதரவு தருவதாக சென்றவர்கள்; அமைச்சராக இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். திமுக எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களான நீங்கள் தான் எதிர்காலம். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்; புதிய வரலாற்றை எழுதுவாம்” எனப் பேசியிருக்கிறார்.