ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு தாமதிப்பது ஏன் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், பரோல் வழங்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு மாநில அரசே பரோல் வழங்கி உள்ளது. அதேபோல் பேரறிவாளனுக்கும் மாநில அரசே பரோல் வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். நேற்று பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் பரோல் தொடர்பாக ஸ்டாலினைச் சந்தித்தார். மேலும் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோரும் ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந்நிலையில் பேரறிவாளர் பரோல் தொடர்பாக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.