2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதியுடன் நிறவடைந்திருக்கிறது. இத்தொடரின், இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்திருக்கிறது. அதன்மூலம் 3 முறை டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் டி.20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 கோப்பை வென்ற முதல் அணி என 3 உலக சாதனைகளை படைத்து அசத்தியிருக்கிறது.
உலகக் கோப்பையை வென்ற இந்த அணியில், தமிழ்நாட்டில் இருந்து வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். வருண்சக்கரவர்த்தி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த சூழலில் தான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரையும் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் திருவள்ளுவர் சிலை ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
இதையடுத்து, இந்த சந்திப்பு குறித்தான புகைப்படங்களை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ”தமிழ்நாட்டின் ஸ்பின் ட்வின்ஸ் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடனான மறக்க முடியாத தருணங்கள். இந்த சந்திப்பில், அவர்களின் பயணம், விடாமுயற்சி, ஒழுக்கம், தன்னம்பிக்கை பற்றி உரையாடல் நடந்தது. இருவருக்கும், இன்னும் பல வெற்றிகரமான தருணங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.