சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், “சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம். அது கண்டிக்கத்தக்கது. கிட்டதட்ட 20 முறைக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கூப்பிட்டபோதெல்லாம் அவர் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” எனத் தெரிவித்தார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் எனவும் அவரது விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
முன்னதாக, ப.சிதம்பரம் கைது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என பல்வேறு தரப்பிலும் இருந்து கேள்வி எழுந்தது. இதையடுத்து ஸ்டாலின் தனது கண்டனத்தை கடுமையாக தெரிவித்துள்ளார்.