ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கவிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கவிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தேர்தல் பணிக்குழுத் துணைச்செயலாளர் சிவப்பிரகாசத்தின் இல்லத் திருமண விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர தங்கு விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய மு.க.ஸ்டாலின், ’’ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து 42 மாதங்கள் ஆகிவிட்டது. விசாரணையை கேட்டவரே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். ஆனால் அவருக்கு ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஜெயலலிதா மரணத்திற்கு விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்படுகிறது. தண்டனை பெற்றவருக்கு நினைவிடம், திறந்து வைப்பவர் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானவர்'' என்றார்.