சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதால், தமிழகத்தில் நிலையான ஆட்சிக்கு தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பரப்பான அரசியல் சூழலில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 21 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. குன்ஹாவின் தீர்ப்பை தற்போது உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. குன்ஹா வழங்கிய தீர்ப்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடி அபராதம் விதித்திருந்தார். நான்கு பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு நிலை நிறுத்தப்பட்டது. இந்த தீர்ப்பு பொதுவாழ்வில் இருப்பவர்கள் தூய்மைக்கு இலக்கணமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதால், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய அரசியல் சாசனப்படி தேவையான நடவடிக்கைகளை ஆளுநர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டால், அந்த நேரத்தில் சூழலைப் பொறுத்து திமுக முடிவெடுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.