தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக்கை எதிர்த்த ஸ்டாலின், தற்போது போராடுபவர்களை கைது செய்வதா?: சீமான்

sharpana

”கடந்த ஆட்சியில் கொரோனாவை காரணம்காட்டி, மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்துப் போராடிய மு.க ஸ்டாலின், தற்போது முதல்வரானதும் அதிமுகவின் அடியொற்றி மதுபானக்கடைகள் திறப்பதும், அதற்கு எதிராக போராடிய நாம் தமிழர் உறவுகள் மீது வழக்குத் தொடுப்பதும் மக்கள் விரோத அரசியல் போக்காகும்” என்று கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுபானக்கடைகளை மூடக்கோரி, நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய பெண்கள் உட்பட நாம்தமிழர் உறவுகள் 120பேர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த ஆட்சியில் கொரோனாவை காரணம்காட்டி, மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்துப் போராடிய மு.க ஸ்டாலின் அவர்கள், தற்போது முதல்வரானதும் அதிமுகவின் அடியொற்றி மதுபானக்கடைகள் திறப்பதும், அதற்கு எதிராக போராடிய நாம் தமிழர் உறவுகள் மீது வழக்குத் தொடுப்பதும் மக்கள் விரோத அரசியல் போக்காகும். தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, மதுபானக் கடைகளை மூடக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய பெண்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மதுபானக்கடைகளின் திறப்பிற்கு எதிராக நாடெங்கிலும் எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு, கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரும்வரையாவது மதுபானக்கடைகள் திறக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.