தமிழ்நாடு

ஸ்ரீவில்லிப்புத்தூர்: அரசுப் பள்ளியில் சேர்ந்து தமிழ் கற்க ஆர்வம் காட்டும் வட மாநில மாணவர்

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ள வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் கற்க ஆர்வம் என தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தோப்பூர் பண்ணையில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்நிலையில் கிராமத்தின் அருகில் உள்ள நூற்பு ஆலைகளில் அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பலர் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இவர்களது பள்ளி வயதுக் குழந்தைகள், பள்ளி செல்லாமல் தங்களது தம்பி தங்கைகளை கவனித்துக் கொண்டும் நூற்பாலையில் விளையாடிக் கொண்டும் திரிந்தனர். இது குறித்து அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் மில்லுக்கு பலமுறை நேரில் சென்று தொடர் முயற்சி மேற்கொண்டதன் பேரில் பெற்றோர் தங்களது பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடைபெற்றது. வட மாநிலங்களைச் சேர்ந்த 6 மாணவ மாணவியரை, பள்ளியில் சேர்த்து தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் இணையதளம் வழியே இவர்களின் சேர்க்கையை உறுதி செய்து அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது.

மேலும் இப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 என்ற தலைமை ஆசிரியரின் அறிவிப்பைத் தொடர்ந்து இவர்களுக்கு தனது சொந்த பணம் தலா ரூ.1000, அரிசி மற்றும் அரசின் விலையில்லா புத்தகப் பை, சீருடை உள்ளிட்டவற்றை தலைமை ஆசிரியர் வழங்கினார். கடந்த கல்வியாண்டில் இப் பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஆன்ட்ராய்டு போன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், இந்த மாணவர்கள் தமிழ் கற்பதற்கு ஆர்வமாக உள்ளனர். இவர்களுக்கு ஹிந்தியில் பாடங்கள் கற்றுக் கொடுப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை மூலம் தன்னார்வலரை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் கற்றுத் தரப்படும் கராத்தே, கணினி பயிற்சி, ஆங்கில பேச்சுப்பயிற்சி உள்ளிட்டவை இந்த மாணவர்களுக்கும் கற்றுத் தரப்படும் என்றார்.