தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். நாட்டுப்படகில் இருந்த 8 மீனவர்களில் மூன்று பேரின் ஆடைகளைக் களைந்தும், இரும்புக் கம்பி கொண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள், மீன்களையும் எடுத்துச் சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 19ஆம் தேதி மவுண் பேட்டன், சில்க்கன், மகேந்திரன், சாமுவேல், பரலோகதாஸ் உள்ளிட்ட 8 பேர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரை அருகே இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 13 பேர், மீனவர்கள் 8 பேரையும் கைது செய்து, இலங்கை கடல் எல்லைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் 3 பேரை இரும்புக் கம்பியால் தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதனால் ஒருவாரம் மீன்பிடிக்க வேண்டியவர்கள் ஒருநாளில் கரை திரும்பியுள்ளனர்.