தமிழ்நாடு

இலங்கைக்கு சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு

சங்கீதா

இலங்கைக்கு நிவாரண உதவியாக தனது சொந்த நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக, எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.

சட்டப்பேரவையில் இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தேவையான உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். 

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், அங்கு வாழும் மக்கள் படும் துயரத்தை சந்தித்து வருவதோடு, உலக நாடுகள் அனுதாபத்துடன் பார்க்கக் கூடிய நிலை உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், முதலமைச்சர் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானம் மனிதநேயத்தின் அடிப்படையாகவும், தமிழர்கள் மனித நேய உலகில் உயர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறினார். மேலும், இலங்கைக்கு நிவாரண உதவியாக நான் சார்ந்த குடும்பம் சார்பாக, 50 லட்சம் நிதியை அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் முதற்கட்ட உதவி என்றும், இலங்கை மக்களுக்கு உதவ எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், எதிர்கட்சி துணைத்தலைவர் 50 லட்சம் தருவாதக தெரிவித்து இருப்பது, மற்றவர்களும் அதை பின்பற்றவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தான் நன்றி தெரிவிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.