ஸ்ரீநாத் - கனிமொழி Pt web
தமிழ்நாடு

எங்கள் முதல்வர் இருந்திருந்தால்., எம்.பி. கனிமொழி பேச்சு - மறுநாளே சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர்!

தூத்துக்குடியில் எங்கள் முதல்வர் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் செய்து தந்திருப்பேன் என்று பேசிய எம்பி கனிமொழியின் வீடியோ வைரலாகி வரும் நிலையில், மறுநாளே சம்பவ இடத்துக்கு சென்ற அமைச்சர் ஸ்ரீநாத் பொதுமக்களின் பிரச்னைகளை கேட்டறிந்திருக்கிறார்.

Premkumar S

திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டினம் அருகே உள்ள ஓடக்கரை பகுதியில் நேற்றைய தினம் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைக்க கனிமொழி எம்பி வருகை தந்தார். அப்போது, அங்கு நின்ற பெண்மணி ஒருவர் பேருந்து நிறுத்தம் கட்டினாலும் ஒரு பேருந்துகளும் நின்று செல்லவில்லை என்று கூறினார். அதற்கு, எங்கள் முதல்வர் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் செய்து தந்திருப்பேன் என்று கூறினார். உடனே நீங்கள் இப்படி கூற கூடாது என்றும் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தானே என அந்தப் பெண் கேள்வி எழுப்பினார். எனினும், தூத்துக்குடி தொகுதியின் எம்.பி. கனிமொழி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

கனிமொழி

இச்சம்பவம் அப்பகுதியில், பரப்பரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், எம்.பி. கனிமொழியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இன்று அமைச்சர் ஸ்ரீநாத் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்றார். தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல, கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண்ணிடமும் கோரிக்கைகளை கேட்டரிந்தார். உடனடியாக பேருந்து பணிமனை மேலாளரை அழைத்து பேருந்து நின்று செல்ல அறிவுறுத்தியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்த அமைச்சர் ஸ்ரீநாத் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தினார். அந்த பேருந்தில் ஏறிய அவர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அனைத்து பேருந்து நிறுந்தங்களிலும் பேருந்துகள் நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய அவர், அடுத்த 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரபாண்டியபட்டணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அவருடன் கட்சியினரும் ஏறி இறங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கிறார்.