தமிழ்நாடு

ஆடைகளை களைந்து சோதனை செய்வதா? ஸ்பைஸ்ஜெட் பணிபெண்கள் எதிர்ப்பு!

ஆடைகளை களைந்து சோதனை செய்வதா? ஸ்பைஸ்ஜெட் பணிபெண்கள் எதிர்ப்பு!

webteam

சென்னை விமானநிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தங்கள் விமானப் பணிப்பெண்களின் ஆடைகளை களைந்து சோ தனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் விமானப் பணிப்பெண்கள், சிலர் அந்நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

விமானத்தில் பணி முடிந்து திரும்பும்போது பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், தங்களது ஆடைகளை களைந்து சோதனை செய்தவதாகவும் இது தங்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் அவர்கள் அதில் தெரிவிக்கின்றனர். 

ஒரு விமானப்பணிபெண் கூறும்போது, ‘பாதுகாப்பு என்ற பெயரில் ஒருவர் என்னை தேவையில்லாத இடத்தில் தொடுகிறார். என் மார்பகத்தை அழுத்துகிறார். இந்த மோசமான நடத்தை மூலம் நான் நிர்வாணமாக நிற்பது போல உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

’கடந்த 3 நாட்களாக சோதனை என்ற பெயரில் இந்தக் கொடுமை நடந்து வருகிறது. பெண் அதிகாரிகள், கண்ட இடங்களில் தொடுகிறார்கள். என் தோழி ஒருவர் அணிந்திருந்த சானிடரி நாப்கினையும் எடுக்கச் சொன்னார்கள். இது அநியாயம்’ என்றார் பத்து வருடமாகப் பணியாற்றும் மற்றொரு விமானப்பணிப் பெண்.

‘பெண்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவதும், நாப்கினை நீக்கச் சொல்வதும்தான் உங்கள் கொள்கையா? பயணிகளின் பாதுகாப்புக்காக எங்களை நியமித்துவிட்டு எங்கள் பாதுகாப்பையும் மரியாதையும் சிதைப்பதுதான் உங்கள் நோக்கமா?’ என்று மற்றொரு விமானப்பணிபெண் கடுமையாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு அவர்கள் கண்டன மெயிலும் அனுப்பியுள்ளனர்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கமல் ஹிங்கோரனி இந்த விவகாரம் தொடர்பாகக் கூறும்போது, ‘விமானத்தில் இருந்து சில பொருட்களையும் நிறுவன பணத்தையும் சிலர் தெரியாமல் எடுத்துச் செல்வதாக அறிந்தோம். அப்படி எடுத்துச் செல்பவர்களை கண்டுபிடிக்கவே இப்படியான சோதனைகளை, மேற்கொண்டுள்ளோம். அந்த ’கருப்பு ஆடு’ யார் என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். நேர்மையான பணியாளர்களை நாங்கள் குற்றம் சொல்லவில்லை’ என்றார்.