கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்றவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வில்சன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் பெங்களூருவில் கைதான பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் பொருந்திப்போவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போன்ற துப்பாக்கியை பயன்படுத்தி வில்சன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. வில்சனை கொலை செய்த இருவருக்கும் பெங்களூரு மற்றும் டெல்லியில் கைதான 6 பேருக்கும் அகமதாபாத்தில் சிக்கிய ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் உள்பட மொத்தம் 14 பேர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கைதான மூவரில் இருவர் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலையில் தேடப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சுரேஷ்குமார் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் கொலை செய்யப்பட்டார். 14 பயங்கரவாதிகள் குழுக்களாக பிரிந்து டெல்லி மற்றும் மும்பையிலும், தென்னிந்தியாவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. குமரி வழியே தமிழகத்துக்குள் நுழையும் போது தப்பிச் செல்வதற்காகவே வில்சனை கொலை செய்ததாகத் தெரிகிறது.