செய்தியாளர்: இரா.சரவணபாபு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி நூற்றாண்டு பழமையான நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாள்தோறும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று (25.12.24) மற்றும் 27, 29 மற்றும் 31ஆம் தேதி ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 26, 28, 30 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது.