தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு டூ நீட் பிரச்னை: 10 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டசபை சிறப்புக்கூட்டங்கள்

Sinekadhara

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்புக்கூட்டம் எவை எவைக்கெல்லாம் கூடி முடிவு எடுத்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

முல்லைப் பெரியாறு பிரச்னை:

2012 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் உரிமையை நிலைநிறுத்தும் வகையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து கருத்துக்கள் பரப்பப்பட்டன. இதனால் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் சிறப்புக்கூட்டம் கூடியது.

இலங்கை காமென்வெல்த் போட்டி:

இலங்கையில் நடைபெற்ற 2013 காமென்வெல்த் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்பதற்காக சட்டமன்ற சிறப்புக்கூட்டம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாலை 5மணியளவில் கூடி, புறக்கணிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்த தடை:

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டபோது, அப்போதைய முதலமைச்சராக இருந்த ஒபிஸ் தலைமையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வகையில் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு அவசர சட்டம் இயற்றப்பட்டது.

மேகதாது அணை விவகாரம்:

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தடுக்கும் வகையில அப்போதைய முதலமைச்சர் எடபாடி பழனிசாமி தலைமையில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.

நீட் விலக்கு மசோதா:

தற்போது நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் விளைவாக மீண்டும் நீட் விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்ற வரும் 8ஆம் தேதி தமிழ்நாடு சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது.