குட்கா முறைகேடு வழக்கு pt desk
தமிழ்நாடு

குட்கா முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகலை இன்று வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், உள்பட 27 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

CBI

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகன் என்பவர் மரணமடைந்து விட்டார். எனவே அவருக்கு எதிரான வழக்கு கைவிடபட்டு மீதமுள்ள 26 பேருக்கு எதிராக மட்டும் தற்போது வழக்கு தொடர்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி,வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை.

இதற்கு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் இறுதி அறிக்கையை (கூடுதல் குற்றப் பத்திரிகை) காகித வடிவிலும் 492 ஆவணங்கள் கொண்டவற்றை பென்-டிரைவ் மூலமாக வழங்குவதாக தெரிவித்தனர். அப்போது மனுதரார்கள் தரப்பில் பென்-டிரைவ் முறையில் வழங்குவதற்கு ஆவணச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

court order

இதனையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், செந்தில்முருகன், நவநீதகிருஷ்ணன், சேஷாத்ரி, வி.ராமநாதன், ஜோசப் தாமஸ், செந்தில் வேலவன், குறிஞ்சி செல்வன், டாக்டர் லட்சுமி நாராயணன், வி.சம்பத், மனோகர், ஆர்.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேருக்கு சிபிஐ-யின் கூடுதல் இறுதி அறிக்கையை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கில் இன்று ஆஜராகதவர்கள் அடுத்த விசாரணைக்குள் கூடுதல் இறுதி அறிக்கை நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.