மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் 2024 | மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு!

PT WEB

சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மக்களவை தேர்தலுக்கு அஞ்சல் வழியாக வாக்களிப்பதற்கு தேவையான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் மூன்று மக்களவை தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியாக அவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கு வசதியாக 12D படிவங்களுடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் வரும்போது, உரிய நகலை சமர்ப்பித்து, படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.

வரும் மார்ச் 25 ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, சென்னை மக்களவை தொகுதிகளுக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலோ, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கோ சென்று, படிவத்தை பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இலவச தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு கேட்டறிந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.