பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவி
பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய தலைமுறை
தமிழ்நாடு

பேரவையில் சபாநாயகர் அப்பாவு உரை - முழு விவரம்

Angeshwar G

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் மலர்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களிலேயே நிறைவு செய்தார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார். தமிழக அரசு வழங்கிய உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்நிலையில், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, “கடந்த 10 ஆண்டுகளில், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ள நமது மாநிலம் இந்திய பொருளாதாரத்தில் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

2022 - 2023 ஆம் ஆண்டின் வளர்ச்சியில் 7.2% நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19% ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் சராசரி பணவீக்கத்தைப் பொறுத்தவரை 2022 - 2023 ஆம் ஆண்டில் நாட்டின் 6.65% பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97% ஆக உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு, அதேகாலக்கட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் நமது மாநிலம் சிறந்து விளங்குவதை இது மெய்ப்பிக்கிறது. மின்னணு பொருள் ஏற்றுமதியில் 2021 - 2022 ஆம் ஆண்டில் 4 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022-2023 ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மாநிலத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்களைப் பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதுவரை கோவில்கள் மற்றும் அறநிலையத்திற்கு சொந்தமான ரூ. 5579 கோடி மதிப்புள்ள 6071 ஏக்கர் நிலங்களை இந்த அரசு ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து மொத்தம் 1290 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாப்பதற்கான பணிகளை ரூ.294 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சபாநாயகர் அப்பாவு

தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, நம்மை ஒன்றிணைத்து நம் வாழ்வை செம்மைப்படுத்தும் உயிர்நாடி. நமது பழமையின் பெருமை, தற்காலத்தின் சிறப்பு, எதிர்காலத்தின் வளத்தின் ஊற்றாகும். உலகத்தமிழர்களுக்கும், தாய் தமிழகத்திற்கான இடையிலான உறவை பேணிகாக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்கிறது” என தெரிவித்தார்.