தமிழ்நாடு

'அதிமுக விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விஷயமல்ல' - சபாநாயகர் அப்பாவு

webteam

அதிமுக துணைத் தலைவர் விவகாரத்தில் கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கையாக இருக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

வ.உ. சிதம்பரனாரின் 151வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் வ.உ. சி. திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, ''தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வ.உ.சி. மணி மண்டபத்தில் ஒலி ஒளி காட்சிகள் மூலம் வரலாற்றை அனைவரும் காணும் வகையிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

வஉசி 150-வது பிறந்த நாள் விழா மற்றும் பாரதியார் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு அவர்கள் இருவர் படித்த பள்ளியில் ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நினைவு வளைவு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட உள்ளது. வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து பெருமைப்படுத்த உரியதாக உள்ளது.

அதிமுக விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல. அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதிமுகவில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர். எந்த பிரிவு சரி, தவறு என்பது குறித்து நீதிமன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் உள்ளது. அதிமுக கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கை சட்டமன்றம் நடக்கும்போது தெரியும். இந்த ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக துணைத் தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக நடவடிக்கையின் அடிப்படையில் முடிவுகள் இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அரசு விரைவுப் பேருந்தில் பயணிகளுக்கு 10% ஆஃபர் - முழு விபரம் இதோ