தமிழ்நாடு

பைக்கில் கூடு கட்டிய சிட்டுக்குருவிக்காக வழக்கறிஞர் செய்த செயல்...!

webteam

தனது இருசக்கர வாகனத்தில் கூடு கட்டிய சிட்டுகுருவிக்காக மூன்று மாதம் தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாத வழக்கறிஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மதுரை உலகனேரி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கொரானா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் வீட்டில் குடும்பத்துடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மே மாதம் இவரது மனைவியின் இரு சக்கர வாகனத்தில் சிட்டுக் குருவி ஒன்று கூடு கட்டி உள்ளது. இதனை அவரது குழந்தை பார்த்து அவரிடம் சொல்லி உள்ளது. சிட்டுக்குருவியின் மேல் ஆசை கொண்ட வழக்கறிஞர் குடும்பம் சிட்டுக்குருவி கட்டிய கூட்டை கலைக்க விரும்பாததால் அந்த இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்தாமல் அதே இடத்தில் வைத்துள்ளனர்.

தற்போது சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது. சிட்டுக்குருவி குஞ்சு பொரித்து தானாக பறந்து செல்லும் வரை தனது இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த போவதில்லை என தெரிவித்துள்ளார். இதனால் சிறிது சிரமம் ஏற்பட்ட போதிலும் சிட்டுக்குருவியின் மகிழ்ச்சி தங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை மூன்று மாதங்களாக இருந்த இடத்தை விட்டு நகர்த்தாமல் சிட்டுக் குருவியின் வீடாக மாற்றி குடும்பமே பாதுகாத்து வருவது அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.