எஸ்.பி.வேலுமணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

பிளவைச் சரிசெய்யும் முயற்சியில் இ.பி.எஸ்.. அதிமுக சீனியர்களுக்கு பொறுப்பு வழங்கி உத்தரவு!

அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் பறித்த பதவிகளை மட்டும் திரும்ப வழங்காமலிருந்தார் கே.பழனிசாமி.

PT WEB

அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு, மீண்டும் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் பொதுச்செயலர்எடப்பாடி கே பழனிசாமி.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவின் ஒருதரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டைஎடுத்தது. சட்டமன்றத்தில் தனி கட்சிபோல செயல்பட்டதுடன், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் செய்தனர். இதனால், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை பறித்ததுடன், அந்த பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி கே. பழனிசாமி. தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமி பக்கம் வந்தார்கள். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் பறித்த பதவிகளை மட்டும் திரும்ப வழங்காமலிருந்தார் கே.பழனிசாமி. சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு, அவர்களுக்கு பொறுப்பு வழங்கியிருக்கிறார் பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி

எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியும், தங்கமணி, கருப்பணன், கே.பி.அன்பழகன், காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தபோது, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொறுப்புகள் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், அதில் தாமதம் ஏற்பட்டதால், சென்ற திங்கட்கிழமை சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், தலைமைச் செயலகத்தில் உள்ள பழனிசாமியின் அறையில் சென்று அவரை சந்தித்த எஸ்பி வேலுமணி, மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படாதது குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்தே தற்போது பொறுப்புகள் வழங்கி அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் இதில் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அனைவருக்கும் திருப்தி இல்லை என தகவல்கள்தெரிவிக்கின்றன. கட்சியில் மாவட்டச் செயலர் பொறுப்புதான் அதிகாரமிக்கது. அதுமட்டுமில்லாமல், தற்போது வழங்கப்பட்டுள்ள துணைப் பொதுச்செயலர், தலைமை நிலையச்செயலர், அமைப்புச் செயலர் போன்ற பொறுப்புகள், பொதுச் செயலரான எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். மேலும், இந்தப் பொறுப்புகள் நிரந்தரமானது இல்லை என்பதாலும், அதிமுக வட்டாரத்தில் மீண்டும் அதிருப்தி குரல் எழ வாய்ப்பிருப்பதாகப் பேசப்படுகிறது.