தமிழ்நாடு

விவேக் நினைவாக 59 மரக்கன்றுகள் நட்டு வைத்த எஸ்பி அரவிந்தன், ரம்யா பாண்டியன்

webteam

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக அவரது 59 வயதை குறிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் 59 மரக்கன்றுகளை மாவட்ட எஸ்பி மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் நட்டு வைத்தனர்.

நடிகர் விவேக் இயற்கை எழில் மிகுந்த ஆர்வம் கொண்டு அனைவரையும் மரக்கன்று நடும் பணியை வலியுறுத்தியும் அவரே நேரடியாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தும் உள்ளார்.

இதற்கு பெருமை சேர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்கள் மூலம் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

உலக புவி தினத்தை ஒட்டியும், மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கின் நினைவாகவும் 59 வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படும் என்றும், மாவட்ட எஸ்பி அரவிந்தன் தெரிவித்தார்.

“உலக பூமி தினம் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாகவும் அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும் 59 மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன. விவேக் மறைந்து விட்டார் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் தமக்கு அதில் உடன்பாடில்லை. அவரது கலை சேவையிலும் இதுபோன்ற இயற்கை ஆர்வத்திலும் அவர் என்றும் மறையாமல் அதே புகழுடன் இருப்பார் என்று நம்புகிறேன்” என ரம்யா பாண்டியன் தெரிவித்தார்.