அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சௌமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். மாலை 6 மணிக்கு காவல்துறையினர் சௌமியா மற்றும் அவரோடு கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்டோரை விடுவித்தனர்.
பின்னர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று காலையில் இருந்து எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்க தொடங்கியது. வாய் பேச முடியாத குழந்தைக்கு ஆதரவாக போராட வந்தோம். கொடி கட்டி வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது. இரண்டு மூன்று மண்டபங்களுக்குப் பிரித்து அனுப்பினர். எங்களை கைது செய்ய வந்த காவல்துறை, பெண் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாமே. அயனாவரம், அண்ணாநகர், கிருஷ்ணகிரி, தஞ்சை, கள்ளக்குறிச்சி, மதுரை கருக்குளம் என பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கிறது.
நிறைய ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. இரு மடங்கு பாலியல் வன்கொடுமை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்க வேண்டும். வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறை வரவில்லை. ஆனால், எங்களை கைது செய்ய முதல் ஆளாக வருகிறார்கள். எனது மனது கொதிக்கிறது. எத்தனை பெண்கள் சாக வேண்டும். எங்கள் குழந்தைகளை எப்படி வெளியே அனுப்புவது. உங்களுக்கும் பெண் குழந்தை உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. மறுபடி மறுபடியும் குற்றம் செய்யக்கூடிய மனநோயாளி ஞானசேகரன். இதுவரை ஏன் குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க வில்லை. எங்கள் போராட்டதால்தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுவும் போதையும் தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம்” எனத் தெரிவித்தார்.
அதன்பின்னர் புதிய தலைமுறையிடம் பேசிய சௌமியா அன்புமணி, “கட்சி பேதம் இன்றி அனைத்து பெண்களுடனும் இணைந்து இந்த விஷயத்திற்காக போராட நான் தயாராக இருக்கிறேன். போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக காவல்துறையினர் எங்களை கைது செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.