தமிழ்நாடு

ரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பா ? - தெற்கு ரயில்வே விளக்கம்

webteam

ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தெற்கு ரயில்வேதுறை விளக்கமளித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே பணி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 541 பேருக்கு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் 541 பேர் பங்கேற்ற நிலையில், 40 பேர் மட்டுமே தமிழகர்கள் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ரயில்வே துறையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் பொன்மலை பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தை அங்கு தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், விளக்கமளித்துள்ள தெற்கு ரயில்வே, ரயில்வே பணிகளில் எந்த வித பாகுபாடிமின்றி பணி நியமனங்கள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது. ரயில்வே பணிகளில் ஆட்கள் நியமனம் செய்ய ரயில்வே பணிநியமன ஆணையம், சென்னை, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், பெங்களூர், புவனேஸ்வர், ராஞ்சி, திருவனந்தபுரம், கவுகாத்தி உட்பட நாடு முழுவதும் 21 இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநியமன ஆணையம் மூலமே அனைத்து ஊழியர்களும் தேர்வு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் திருச்சி பொன்மலை பணிமணையில் தேர்ச்சி நபர்களுக்கு கடந்த 4ஆம் தேதி முதல் சமூக இடைவெளியுடன் சான்றிதழ் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளபடி, ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் பணிநியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 2018ஆம் ஆண்டில் ரயில்வே துறையில் 3,218 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 51% பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனப்பட்டுள்ளது. இதில் 17% பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற நபர்கள் உரிய கல்வித் தகுதி பெற்றிருக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் 53% உதவி லொகொ பைலட் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் தமிழகத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.