தமிழ்நாடு

சென்னை காவல் துறைக்கு அதிநவீன எக்ஸ்ரே ஸ்கேனர் பாதுகாப்பு வாகனம்

kaleelrahman

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அதிநவீன எக்ஸ்ரே ஸ்கேனர் பாதுகாப்பு வாகனத்தை பாதுகாப்பு பிரிவிற்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஊடுகதிர் வாகனத்தின் மதிப்பு ரூ. 32,99,000. இது பொதுமக்களின் கைப்பை மற்றும் உடைமைகளை பிரித்துப் பார்க்காமலே அதனுள் இருக்கும் பொருட்களை (வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள்) ஆய்வு செய்து கண்காணிப்பு திரை மூலமாக கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலருக்கு பணிச்சுமையை குறைப்பதோடு குறைந்த நேரத்தில் பொதுமக்களின் அதிக உடைமைகளை சோதனை செய்ய உதவும் இந்த வாகனம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள மிகவும் உபயோகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த வாகனம் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் இந்த வாகனத்தை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை பாதுகாப்பு பிரிவிற்கு இன்று வழங்கினார். அப்போது காவல் கூடுதல் ஆணையர்கள் லோகநாதன், செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.