திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 28-ஆம் தேதி கந்தசஷ்டி பெருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்குச் சென்று தங்கி விரதமிருந்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. கடலோரத்தில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். காவல்துறை தென்மண்டல தலைவர் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்