தமிழ்நாடு

மகனே பெற்றோரை கொன்று நாடகமாடியது அம்பலம் - ஏசி வெடித்த விசாரணையில் திருப்பம்

மகனே பெற்றோரை கொன்று நாடகமாடியது அம்பலம் - ஏசி வெடித்த விசாரணையில் திருப்பம்

Rasus

திண்டிவனம் அருகே காவேரிப்பாக்கத்தில் ஏசி வெடித்து 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெற்ற மகனே கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரையும் கொலை செய்துவிட்டு கணவன்- மனைவி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காவேரிப்பாக்கத்தில் வசித்த ராஜ் என்பவர், தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இரவு உறங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் முதியவர் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன், போலீசாரின் சந்தேகத்தை தீவிரப்படுத்தியது.

தீ எரிந்து கொண்டிருந்தபோது அதே வீட்டின் மற்றொரு அறையில் ராஜின் மூத்த மகனான கோவர்த்தனன் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கோவர்த்தனன் மீது போலீசாருக்கு அதிக சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் 3 பேரையும் கொலை செய்துவிட்டு, கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

அதாவது உயிரிழந்த ராஜூக்கு, அதிக சொத்துகள் இருப்பதாக தெரிகிறது. அதேசமயம் ராஜ், மூத்த மகனான கோவர்த்தனனை விட இரண்டாவது மகனான கவுதமன் மீது அதிக அன்பும் அக்கறையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜ் மீது ஆத்திரமடைந்த கோவர்த்தனன், தாய் தந்தை சசோதரர் எனப் பாராமல் 3 பேரையும் திட்டமிட்டே கொலை செய்துள்ளார்.

3 பேரும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார் கோவர்த்தன். அப்போது அவர்கள் உடலில் நன்றாக தீப்பற்றி எரிந்தபோது அவர்கள் ‘காப்பாற்றுங்கள்’, ‘காப்பாற்றுங்கள்’ எனக் கூச்சலிட்டுள்ளனர். இதனையத்து 3 பேரையும் கோவர்த்தனன் வெட்டி கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குடும்பப் பிரச்னையில் பெற்ற தாய் தந்தை, உடன் பிறந்த சகோதரர் என்றும் கூட பார்க்காமல் 3 பேரையும் திட்டமிட்டு கொலை செய்த கோவர்த்தனன் கைது செய்யப்பட்டார். அவரது மனைவியான தீபா காயத்ரியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.