ராபின்
ராபின்  PT WEB
தமிழ்நாடு

குன்றத்தூர்: தந்தையை கொலை செய்துவிட்டு கூலாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய மகன்; சிக்கியது எப்படி?

webteam

குன்றத்தூர் அருகே உள்ள பூந்தண்டலம், சக்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை(70). இவர் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் தினமும் இரவு நேரத்தில் நர்சரி கார்டனில் படுத்து உறங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த ஈஸ்டர் தினத்தின்போது, நர்சரி கார்டனில் உறங்கிக்கொண்டிருந்த தங்கதுரை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்துத் தகவலறிந்து சென்ற போலீசார், தங்கதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மர்மநபர்களைத் தேடி வந்தனர். உயிரிழந்த தங்கதுரையின், கையில் அணிந்திருந்த மோதிரம் திருடுபோனதால், நகைக்காகக் கொலை நடந்துள்ளதா? அல்லது முன் விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

நள்ளிரவில் தந்தையைக் கொலை செய்த மகன்

இந்தநிலையில், உயிரிழந்த தங்கதுரை குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தங்கதுரை மகன் ராபின் என்ற ராபின்சன்(43), என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தான் கொலை செய்யவில்லை எனவும் கொலை சம்பவம் நடந்த அன்று குடும்பத்தினருடன் ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயத்தில் இருந்ததாகவும் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களைக் காட்டியுள்ளார். இதனால் போலீசார் குழம்பியுள்ளனர்.

பின்னர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு நேரத்தில் ராபின் நர்சரி கார்டனுக்கு சென்றுவந்தது பதிவாகியிருந்தது. இதனை ஆதாரமாக வைத்து அவரிடம் போலீசார் நடத்திய, தீவிர விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

நர்சரி கார்டன்

போலீசார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அவரிடம் நடத்திய விசாரணையில், ராபினுடைய அண்ணன் டென்னிஸ் ராஜ் இறந்து போனதால் அவரது நிலத்தை தங்கதுரை விற்க முடிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராபின் தனது தந்தையைக் கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் ஈஸ்டர் தினத்தில் குடும்பத்தினர் அனைவரையும் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் நர்சரி கார்டனுக்கு வந்து உறங்கிக்கொண்டிருந்த தந்தையை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது

சொத்துக்காக தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.