தமிழ்நாடு

குளிர்பானத்தில் மயக்க மருந்து - ரயில் நிலையத்தில் நகையை பறிகொடுத்த மூதாட்டி

webteam

ரயில் பயணியிடம் மயக்க மருந்து கலந்தக் குளிர்பானம் கொடுத்து 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்தாய்(64). இவர் மதுரை வாடிப்பட்டியில் உள்ள கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக நேற்று மதுரை ரயில் நிலையம் வந்துள்ளார். மதுரையில் இருந்து நாகர்கோவில் வருவதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த அவரிடம் இரண்டு பேர் பேச்சு கொடுத்துள்ளனர். அவர்களை தாய்-மகன் என நம்பிய செல்லத்தாய் நட்பாகப்பேசியுள்ளார்.

அப்போது அவர்கள் இருவரும் செல்லத்தாயிடம் மயக்க மருந்து கலந்தக் குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதை குடித்த செல்லத்தாய் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் செல்லத்தாயின் கழுத்தில் இருந்த 9 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த செல்போன் மேலும் 3000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றதாக தெரிகிறது.

மயக்கம் தெளிந்து பார்த்த செல்லத்தாய் நகைகள் பறிப்போனதை அறிந்து போலீசாருக்குப் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.