தமிழ்நாடு

“ஆட்சியை பிடித்துவிட சிலர் கனவு காண்கின்றனர்” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

webteam

தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று சிலர் கனவு கொண்டிருக்கின்றனர் என்றும், அது நிறைவேறாது எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், தவிர்க்க முடியாத கார‌‌‌ணத்தினால் அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி கட்சித்தலைவர்களான ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அரசும், கட்சியும் என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று சிலர் கனவு காண்பதகவும், அந்த கனவு நிறைவேறாது என்றும் கூறினார்.