தமிழ்நாடு

சுவரை ஓட்டை போட்டு நகைக்கடையில் கொள்ளை

webteam

உத்திரமேரூர் அடுத்த படூர் கிராமத்தில் நகைக்கடை சுவரை ஓட்டை போட்டு 1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் நாராயணலால்(48). இவர் உத்திரமேரூர் அடுத்த காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட படூர் கூட்டுரோடு பகுதியில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நகைகடையை ஒட்டியவாறு, துரித உணவு கடையும் உள்ளது. 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு துரித உணவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், நகை கடையின் பக்கவாட்டு சுவரை
ஓட்டைபோட்டுள்ளனர். அந்த சுவர் திடமாக இருந்ததால் வேறு சுவரை தேர்ந்தெடுத்து ஓட்டை போட்டுள்ளனர். பின்னர், நகைக்கடைக்கு உள்ளே சென்ற அவர்கள் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிபொருட்களை கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளனர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு திருச்சி லலிதா ஜூவல்லரியின் சுவரை ஓட்டை போட்டு நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.