தமிழ்நாடு

சமூகத்தில் டெக்னாலஜி, பொருளாதார சவால்கள் உள்ளன! அதை சமாளிக்க கணினி படியுங்கள்!-டிஜிபி

webteam

சமூகத்தில் நிறைய டிஜிட்டல் திருட்டு நடக்கிறது, நம்மை சுற்றி நிறைய டெக்னாலஜி மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கின்றன, அதை சமாளிக்க கணிணி துறையை தேர்ந்தெடுங்கள் என மாணவர்களிடையே பேசியுள்ளார், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.

யாராவது லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால் ஆபத்து தான், வீட்டு பெண்களிடம் நிறைய எம்பவர்மெண்ட் என்பது இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில் "நவீன சகாப்தத்தில் சைபர் பாதுகாப்பு சவால்கள்" குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களிடையே பேசினார். மாணவர்களிடையே அவர் பேசுகையில், மாணவர்கள் தங்கள் மனதில் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். நீங்கள் படிக்கும் பாடம் உங்களுக்கு பிடித்து விட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நீங்கள் நன்றகா படிப்பீர்கள், ஆனால் பிடிக்கவில்லை என்றால் கடினமாக இருக்கும். தற்போதைய கல்விதுறையில் கடைபிடிக்க வேண்டிய 4 முக்கிய கொள்கைகள் உள்ளன. அவற்றில் புதியவற்றை உருவாக்க வேண்டும், தொடர்பு துறையை மேம்படுத்த வேண்டும், தமிழ், ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அறிவுடன், உடல்மொழி ஆகியவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் முதலியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

"கூகுள்" தான் உலகத்தில் உள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகம், இதுதான் டிஜிட்டல் டெக்னாலஜி. முன்பு திருடர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி செல்வார்கள். ஆனால் தற்போது இணையதளம் வழியாக பல்வேறு சைபர் க்ரைம் நடைபெற்று வருகிறது. 7 ஆம் வகுப்பு வரை படித்த எனது தாயார் குடும்பத்தில் ஒருவரையாவது அரசாங்க உத்தியோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்க வைத்து, என்னை அரசாங்க வேலைக்கு அனுப்பினார். அவருக்கு தற்போது 93 வயதாகிறது, அவர் நினைத்ததை சாதித்து காட்டியுள்ளார். இதை தான், எம்பவர்மெண்ட் என்பார்கள். எனவே, பெண்கள் எல்லோரும் எம்பவர்மெண்ட்டாக இருக்க வேண்டும்.

சில சைபர் கிரைம்கள் இப்படி தான் நடக்கும், உங்கள் வீட்டு மின் கட்டணத்தை நீங்கள் கட்டவில்லை எனவே உங்களுடைய இணைப்பு இன்று துண்டிக்கப்படும். நாங்கள் அனுப்பும் ஒரு லிங்க் கிளிக் செய்து 10 ரூபாய் அனுப்பி வையுங்கள் என்று கூறி, உங்களது வங்கியில் உள்ள முழு பணத்தையும் எடுத்துவிடுவார்கள். யாராவது வங்கி கணக்கு எண் கேட்கிறார்கள் என்றால் உங்கள் வங்கி கணக்கில் அவன் திருட போகிறான் என்று அர்த்தம், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் நல்ல அறிவாற்றலும், கம்ப்யூட்டர் பயிற்சியும் உள்ள வல்லுனர்கள் நிறைய தேவைப்படுகிறார்கள். எனவே, கணினி துறையில் படிப்பவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு உள்ளது. நம்மை சுற்றி சமுகத்தில் நிறைய டெக்னாலஜி சேலஞ்ச் உள்ளது மற்றும் பொருளாதார சேலஞ்ச் உள்ளது. இதனை சமாளிக்க கம்யூட்டர் படித்தவர்கள் நிறைய தேவை. நீங்கள் நன்றாக படியுங்கள் என மாணவர்களிடம் உத்வேகமாக பேசினார்.