உயிரிழந்த உமர் அலி
உயிரிழந்த உமர் அலி புதியதலைமுறை
தமிழ்நாடு

கடலூர் | பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த பாம்பு பிடி வீரர்.. வனத்துறையினரின் அலட்சியம் காரணமா?

PT WEB

செய்தியாளர் - நாசர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த உமர் அலி என்பவர் குடியிருப்புகள் பாம்புகள் புகுந்தால் அதனை பிடிக்கும் சமூகப் பணியில் சில மாதங்களாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பண்ருட்டி பகுதியில் சுகுணா என்பவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உமர் அலிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதே சமயத்தில் பண்ருட்டி தீயணைப்பு துறையினர் சென்று அந்தப் பாம்பை சுகுணா வீட்டிலிருந்து பிடித்துள்ளனர்.

இந்நிலையில் தாமதமாக வந்த உமர் அலி தன்னிடம் அந்தப் பாம்பை கொடுக்கும் படியும், தான் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டு விடுவதாக கூறி அந்த பாம்பை வாங்கி உள்ளார்.

அப்போது உமர் அலியை விஷம் கொண்ட அந்த பாம்பு கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

“இந்த உயிரிழப்புக்கு தீயணைப்புத் துறையினர்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உமர் அலியின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து பண்ருட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் முறையான அனுபவம் இல்லாத பலர் இதுபோல் பாம்பு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதும், அப்படி பாம்பு பிடிப்பதை காட்சிகளாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும் வழக்கமாகி வருகிறது.

எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வனத்துறையினரும் இதனை சரியாக கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உயிரிழப்புகள் ஏற்படும் முன்பாக இதுபோல் சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.