கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆறு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் ஜல்லி மேட்டுப்புதூர் பகுதியில் வசிப்பவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் தேவையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இவர்களிடம் 120-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று இவரது பட்டியில் இருந்த ஆடொன்று ஆறு கால்களுடன் கூடிய ஆண் குட்டியை ஈன்றுள்ளது.
நேற்று பிறந்த இந்த ஆட்டுக்குட்டிக்கு வழக்கமான முறையில் நான்கு கால்கள் இருந்தாலும் கூடுதலாக அதன் வயிற்றின் அருகே புதிதாக இரண்டு கால்கள் உள்ளன. இந்த ஆட்டுக்குட்டி வழக்கம்போல் நான்கு கால்கள் உதவியுடன் நடந்தாலும் கூடவே ஒட்டியுள்ள இரண்டு கால்கள் அதற்கு சிரமத்தை கொடுப்பதாகவே உள்ளது. ஆறு கால்களுடன் பிறந்த இந்த ஆட்டுக்குட்டியை நேரில் வந்து ஆய்வு செய்த கால்நடை மருத்துவர், ஆடு முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அதன் உயிருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயன் கூறும்போது, பல வருடங்ளாக ஆடுகள் வளர்த்து வருகிறேன், ஆனால் 6 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை தற்போது தான் பார்க்கிறேன். மேலும் இந்த ஆடு நல்லமுறையில் உள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார். இந்த தகவல் பரவியதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆறுகால் ஆட்டுக்குட்டியை காண ஆர்வமுடன் வந்தபடி உள்ளனர்.