சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர் நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாலாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சார்பில் பதிவு செய்த 6 பாலியல் வழக்குகளில் ஏற்கெனவே இரண்டு வழக்குகளுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று மற்ற வழக்குகள் சம்மந்தமாக மீண்டும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சென்னை சிபிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் மகிளா நீதிமன்ற நீதிபதி ரீனா, சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து மீண்டும் வருகிற 30.11.2021 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து சிவசங்கர் பாபாவை சந்திக்க, பாபாவின் ஆதரவாளர்கள் கைக் குழந்தையுடன் ஆண்கள் பெண்கள் முதியவர்கள் என ஏராளமானோர் இன்று காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்க கோரி சிவசங்கர் பாபா மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது சிபிசிஐடி, புழல் சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டனர். நெஞ்சுவலி, நீரழிவு, கண்பார்வைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொடர் சிகிச்சையால் மட்டுமே தனது வாழ்நாளை நீட்டிக்க முடியும் என அந்த மனுவில் சிவசங்கர் பாபா குறிப்பிட்டு இருந்தார்.