தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - உயர் நீதிமன்றம்

Sinekadhara

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் இயங்கி வந்த சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் வந்த நிலையில், புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவர் மீது மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஏற்கெனவே சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். அதில், தனது உடல்நிலை குறித்த தகவல்களைத் தெரிவித்திருந்ததாலும் தற்போது உயர் நீதிமன்றமும் அவருடைய ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறது.

பொதுவாக புகாரளித்த மாணவிகள் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்திருப்பர். அந்த வாக்குமூலமும் காவல்துறையிடம் அளித்த புகாரில் உள்ள தகவல்களையும் வைத்து நீதிபதி தற்போது இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

ஏற்கெனவே இவர்மீது 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.