சிவகாசி அருகே தூய்மை இந்தியா திட்டப்பணிக்கான காசோலை வழங்க ரூ.2500 லஞ்சம் பெற்ற அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். ஒப்பந்ததாரரான இவர், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டும் பணிகள் செய்து வருகிறார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனி நபர் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பணிக்கான காசோலை பெறுவதற்காக ஒப்பந்ததாரர் செல்வம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாரை நாடியுள்ளார். அப்போது காசோலையை வழங்க ரூ.2500 லஞ்சம் தருமாறு சிவகுமார் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் ஒப்பந்ததாரர் செல்வம் புகார் அளித்துள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழங்கிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செல்வம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சீனிவாசபெருமாள் தலைமையிலான போலீசார், சிவகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.