கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது சென்னை மெரினாவில் சிவாஜி கணேசனின் சிலையை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சிவாஜி கணேசனின் சிலை நிறுவப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு மீதான விசாரணையின்போது, மனுதாரரின் புகாருக்கு பதில் அளித்த தமிழக அரசு, மெரினா காமராஜர் சாலையில் இருந்து சிவாஜியின் சிலை அகற்றப்பட்டு அடையாறில் கட்டப்பட்டு வரும் அவரது மணி மண்டபத்தில் நிறுவப்படும் எனத் தெரிவித்தது.
அதன்படி சிவாஜியின் சிலையை அகற்றும் பணி நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்டது. நடிகர் சிவாஜி சிலையை அகற்றியது மிகுந்த மனவேதனை அளிப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.